இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா?

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஏன் என்றால் நான் ஒரு மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன். அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக நான் அவளை திருமணம் செய்து கொள்வேன். இருப்பினும் இதுவரை நான் அவளை இஸ்லாத்தை ஏற்குமாறு சொல்லவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் என்ன சொல்கின்றது? அந்த பெண்ணின் கவர்ந்த பார்வையிலிருந்து / அழகிலிருந்து விலகிக்கொள்ள ஏதேனும் துஆ உள்ளதா?

Name: riyaaz
email: riy_z@.....
Location: chennai
Subject: ques..

......................

ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.

அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது.

அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.

இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.

திருமண வாழ்க்கை என்பது சந்தோஷ்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3) என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ (இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது. (சகோதரர் ரியாஸ் போன்றவர்களின் காதல் சொல்லும் பாடம்). ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து
இதயம் நுழையும் காதல்
உயிரில் கலந்த
உறவாக ஆக வேண்டுமானால்
அது உயர்வான இறைவனின்
வழிகாட்டுதலில் வந்தால்தான் நடக்கும்.

சகோதரர் ரியாஸ் போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை. நீங்கள் விரும்பும் பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

முடியாத பட்சத்தில், நம் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் நமக்கு மேல்.

0 Responses

கருத்துரையிடுக