குற்றப்பத்திரிக்கை மறுமையில் வழங்கப்படும்

குற்றப்பத்திரிக்கை மறுமையில் வழங்கப்படும்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

பதிவேடுகள்

அந்நாளில் மனிதர்களின் நன்மை தீமைகள் எடைபோடப்படுவது மட்டுமின்றி அவர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான விபரங்கள் உள்ளடக்கிய பதிவேடுகளும் அவர்களின் கைகளில் வழங்கப்படும். இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் விரிவாகக் குறிப்பிடுகின்றது.

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயமும் முழந்தாளிட்டிருப்பதைக் காண்பீர். ஒவ்வொரு சமுதாயத்தவரும் தத்தமது பதிவேட்டின் பால் அழைக்கப்படுவர். 'நீங்கள் செய்ததற்குரிய கூலி இன்று வழங்கப்படும். இது உங்களைப் பற்றிய நன்மைகளைக் கூறும் பதிவேடாகும். நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்ததை நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்தோம்' (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 45:28,29)

பதிவேடுகள் வழங்கப்படாத எந்தச் சமுதாயமும் இராது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

குற்றப்பத்திரிக்கை வழங்காமல் கூட இறைவன் யாரையும் தண்டிக்கலாம். அவ்வாறு தண்டித்தால் அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் எவருக்குமே இருக்கப் போவதில்லை என்றாலும் எவரையும் குற்றப்பத்திரிக்கை வழங்காமல் இறைவன் விசாரணை செய்வதில்லை. நமக்கு எள்ளளவும் அநீதி இழைக்கப்பட வில்லை என்பதை மனிதன் சந்தேகமற புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பதிவேடுகள் வழங்கப்படுவதற்கான காரணம்.

'மேலும் உண்மையைப் பேசும் பதிவுப்புத்தகம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது' (அல்குர்ஆன் 23:62)

தனக்கு சிறிதும் அநீதி இழைக்கப்படவில்லை என்பதை மனிதன் சந்தேகமற அறிந்து கொள்வதற்காகவே குற்றப்பத்திரிக்கை அவனிடம் வழங்கப்படுகிறது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இந்தக் குற்றப்பத்திரிக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு வழங்கப்படாது. மாறாக விசாரணைக்கு முன்பே வழங்கப்படும். அதைப் படித்துப் பார்க்கும் அவகாசமும் வழங்கப்படும். அதன்பிறகே விசாரணை நடைபெறும்.

'ஆகவே எவருடைய பதிவேடு வலக்கையில் வழங்கப்படுகிறதோ அவர் இலேசான முறையில் கேள்வி கேட்கப்படுவார்' (அல்குர்ஆன் 84:07)

பதிவேடு வழங்கப்பட்ட பிறகு தான் விசாரிக்கப்படும் என்பதற்கு இது சான்று.

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம். திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். 'நீ உனது ஏட்டைப் படித்து பார்! உனது கணக்கைப் பார்க்க நீயே போதும்' (என்று அவனிடம் கூறப்படும்). (அல்குர்ஆன் 17:14)

பதிவேட்டைப் படிக்க அவகாசம் அளிக்கப்படும் என்பதற்கு இது சான்று.

இந்தப் பதிவேடு வழங்கப்பட்டு அதன் பின்னர் விசாரிக்கப்பட்டு அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றாலும் அந்தப் பதிவேடு வழங்கப்படும் முறையிலிருந்து ஒவ்வொருவனும் தனக்குரிய தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்வான்.

வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டால் விசாரணை எளிதாக இருக்கும். இடது கையிலோ, முதுகுக்குப் பின்புறமாகவோ பதிவேடு வழங்கப்பட்டால் அவரது நிலை மிக மோசமாக இருக்கும். வலது கையில் வழங்கப்பட்டவர்கள் தமது பதிவேடுகளைப் படிப்பார்கள். தமக்குத் தெரிந்தவர்களையெல்லாம் அழைத்துப் படித்துப் பார்க்கச் சொல்வார்கள். இடது கையிலோ முதுகுக்குப் பின்புறமாகவோ வழங்கப்பட்டவர்கள், தமது பதிவேட்டைப் படிக்கவும் தயங்குவார்கள். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

எவர்களின் பதிவேடு வலக்கரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் தமது ஏடுகளைப் படிப்பார்கள். அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

எவருடைய பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர் (மகிழ்வுடன்) 'வாருங்கள்! எனது பதிவேட்டைப் படியுங்கள், நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை திட்டமாகச் சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்' என்று கூறுவார். ஆகவே அவர் திருப்தியான வாழ்க்கையில் உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார். (அல்குர்ஆன் 69:19-22)

ஆனால் எவருடைய பதிவேடு இடக்கையில் கொடுக்கப்பட்டதோ அவன் 'எனது பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாமே! எனது கேள்விகணக்கு எதுவென்பதை நான் அறியவில்லையே! (நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே என்று கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

எவருடைய பதிவேடு முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகிறதோ அவன் தனக்குக் கேடுதான் எனக்கூறியவனாக நரகத்தில் நுழைவான். நிச்சயமாக அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தாருடன் மகிழ்வுடன் இருந்தான். நிச்சயமாக தான் (இறைவன் பால்) மீளவே மாட்டான் என எண்ணியிருந்தான். (அல்குர்ஆன் 84:10-14)
அந்தப் பதிவேட்டில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என்ற பேதமில்லாமல் அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

பதிவேடு வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள் 'எங்கள் கேடே! இந்த ஏட்டுக்கு என்ன நேர்ந்தது? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காமல் இந்த ஏடு விட்டுவைக்க வில்லையே' என்று கூறுவார்கள். இன்னும் அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

இந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டவை திடீரெனத் தயாரிக்கப் பட்டவையன்று. மாறாக மனிதன் இவ்வுலகில் வாழும் போதே அவன் ஒவ்வொரு சொல்லும் செயலும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டன. அதுதான் மனிதனிடம் வழங்கப்படும்.

நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (அல்குர்ஆன் 82:10-12)

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இருவர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கண்காணித்து எழுதக் கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்தச் செயலையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் 50:17-18)

மனிதனின் சின்னஞ்சிறு செயல்களும் சொற்களும் பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஏடுகள் எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும். அது எப்படி வலது கையால் பார்க்குமளவுக்கு இருக்க முடியும் என்று விதண்டாவாதம் புரிவோர் கேட்கக் கூடும். சின்ன 'டிஸ்க்' கில் ஏராளமான விபரங்களைக் கம்ப்யூட்டரின் துணையுடன் மனிதன் பதிவு செய்ய முடியும் என்றால் படைத்த இறைவனால் இது இயலாதா? என்று சிந்தித்தால் இந்த ஐயம் விலகும்.

0 Responses

கருத்துரையிடுக